×

தர்மபுரி அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 6 வயது சிறுவன் கொலை: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சடலம் மீட்பு

தர்மபுரி: தர்மபுரி அருகே சிறுவனை கொலை செய்து பயன்பாடு இல்லாத 30 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டியில் வீசியது தொடர்பாக 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் சிறுவனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள காட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம். லாரி டிரைவர். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் மதியரசு (6). கடத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16ம் தேதி மாலை வீட்டின் அருகேயுள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் விளையாடி கொண்டிருந்தான். இரவு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர், பல இடங்களில் தேடினர். எந்த தகவலும் இல்லாததால் கிருஷ்ணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஆதிமூலம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடினர்.

நேற்று மாலை மதியரசுடன் விளையாடிய 3 பேரை பிடித்து தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். இதில், கடைசியாக விளையாடிய 18 வயதுள்ள வாலிபரை பிடித்து விசாரித்தனர். விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில், கன்னத்தில் தாக்கியதாகவும், அப்போது சிறுவன் மதியரசு மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்தான். மேலும் இந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 18 வயது வாலிபரின் செல்போனை மதியரசு அடிக்கடி வாங்கி யூடியூப் வீடியோக்களை பார்ப்பதுடன், கேம் விளையாடியும் வந்துள்ளான். இதனை பயன்படுத்தி சம்பவத்தன்று ஓரின சேர்க்கைக்கு சிறுவனை வாலிபன் அழைத்துள்ளான். மறுத்ததால் கட்டையால் சரமாரி அடித்துக் கொலை செய்துள்ளான். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் இருக்க, மறைவான இடத்தில் சடலத்தை வைத்துள்ளான். பின்னர் கிராமத்தில் ஆள் நடமாட்டம் குறைந்த பின்னர், இரவில் கிராமத்தில் பயன்பாடு இல்லாமல் இருந்த 30 அடி உயர மேல்நிலை நீர்தேக்க தண்ணீர் தொட்டிக்கு ஏணி வழியாக சிறுவனின் சடலத்தை தூக்கி கொண்டு வீசி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று மாலை சிறுவனின் உடலை தொட்டியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனிடையே இந்த கொலை தொடர்பாக போக்சோ பிரிவின் கீழ் கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 18 வயது வாலிபரை கைது செய்தனர். அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சங்ககிரி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post தர்மபுரி அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 6 வயது சிறுவன் கொலை: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...